Friday, April 20, 2012


தந்தைமை

~என்.விநாயக முருகன்






என் வீட்டு மாடிப்படி யோரம்
தினம் தினம் அலைந்துக் கொண்டிருந்த
வெள்ளைநிற வயிறு பெருத்த பூனை
நான்கு குட்டிகளை ஈன்றிருந்தது நேற்று

குட்டிப்போட்ட பூனை சும்மா இருக்குமா?
நொடிக்கொரு முறை மாடி யேறியது
சமையல்கட்டுக்குள் பதுங்க இடம் தேடியது
மாடிப்படிகளில் கக்கி வைத்தது கண்டதையும்
இரவுகளில் அழுதது உயிர் கரைய

தொந்தரவு மிகுந்த முன்னிர வொன்றில்
இரை தேடிச் சென்றவளை ஏமாற்றி
பலவந்தமாய் பிடுங்கிய குட்டிகளை
பக்கத்துத் தெரு குப்பைத்தொட்டி யோரம்
விட்டு திரும்பிய மறு கணம்

பிரசவத்துக்கு அம்மா வீடு சென்றிருந்த
மனைவியிடமிருந்து அலைபேசி தகவல் வந்தது
தாயும் சேயும் நலமென்று ஆறுதலாய்



http://nvmonline.blogspot.in/2010/11/blog-post_06.html
Picture Courtesy

ஒரு மழை



~என்.விநாயக முருகன்




ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது

ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது

ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது

ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது

ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது

ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது


ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது
http://nvmonline.blogspot.in/2011/11/blog-post_26.html 
Picture courtesy 

ஜப்திக்கு வந்த வீடு


~என்.விநாயகமுருகன்


ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

http://nvmonline.blogspot.in/2011/12/blog-post.html
Picture Courtesy 

மதுக்கடையில் உருளும் கோலிக் குண்டுகள்.





குடிப்பவர்களுக்குக் குற்றேவல் புரிந்து
அலைக்கழிந்த சிறுவன்
நிறைந்த போதையில் வெளியேறும் ஒருவனிடம்
இறைஞ்சிய சில்லரை
கை நழுவி விழுகிறது தரையில்.
எடுக்கக் குனிகையிலோ
நிகழ்கிறதொரு அற்புதம்....
அவன் சட்டைப் பையிலிருந்து தவறி
கலீரிட்டுச் சிதறின கோலிக் குண்டுகள்.
அத்தனை பேரையும் சட்டென்று இணைத்துக்கொண்டு
நெடுக ஓடுகின்றன அவை.
கடந்த காலங்களில் மிதந்து
பார்த்திருப்பவர்களின் பால்யத்தில்
தட்டி நின்றன.
தயங்கித் திகைத்த சிறுவனிடம்
கருணை கூர்ந்து ஒருவன்
தன்னருகே கிடந்ததை எடுத்துக் கொடுத்தான்.
போதை மிகைத்த அன்புடன்
மற்றொருவனும் அவ்வாறே செய்தான்.
தாளாக் குற்றவுணர்வில்
நெகிழ்ந்த கரங்கள் பல
ஆசிகளெனக் கோலிக் குண்டுகளைப்
பொறுக்கிச் சேர்த்தன அவனிடம்.

தீராத கணக்கு.





எதையோ நினைத்தபடி
எங்கோ சென்றுகொண்டிருக்கும்போது
சட்டென்று உன் குழந்தையுடன் வழிமறித்து
பிச்சை என்று கேட்டாய்.
தெய்வமே அந்தக் குழந்தை
என்னமாய்ச் சிரித்தது....
அதற்கு மாறாக நீ என்
சட்டையைப் பிடித்து உலுக்கியிருக்கலாம்
ஓரிரவில் சாக்கடையோரம்
கொசுக்கள் குதறும் வதையில்
துடித்துப் புரளும் குழந்தையைக் காட்டி
அய்யா என யாசித்தாய்
உறக்க மயக்கத்தில் அழச் சக்தியற்று அது
எவ்வளவு ஈனமாய் சிணுங்கியது....
அதற்குப் பதில் நீ என்னை
அடித்துப் பிடுங்கியிருக்கலாம்
பஸ்ஸுக்குக் காத்திருக்கும் கூட்டத்திடையில்
உன் குழந்தை என் கால்களைத் தொட்டு
கை மலர்த்தும்படிச் செய்தாயே,
ஒஅரிதாபமாய் முகம் காட்ட அது அப்போது
எவ்வளவு பாடுபட்டது...
அதைவிடவும் நீ என்னை
முகத்தில் உமிழ்ந்து கேட்டிருக்கலாம்
இறுகிய முகத்தின் கண்ணீர்த் தடத்துடன்
அனாதைக் குழந்தையை அடக்கம் செய்ட்யவென்று
இரந்து நிற்கிறாய் இன்று
புவி சுமக்க முடியாத பாரமாக இது
எவ்வளவு அமைதியாகக் கிடக்கிறது.....
அய்யோ அய்யோ என்று
பதறி அழிந்தபடியே
ஒவ்வொரு அடியையும் எடுத்துவைத்து
உன்னைக் கடந்து போகின்றேன்
தாயே என்னைக் கொன்று பழி தீர்க்க
ஏன் உனக்குத் தெரியவில்லை.


ஒரு பதில் வேண்டி



உமா மகேஸ்வரி 



நெடுங்காலமாய்
பூட்டியிருக்கும் வீட்டில்

இரவெல்லாம்
அறையறையாய்
அலைந்துகொண்டிருக்கிறது
ஆளில்லாத
ஒரு சக்கர நாற்காலி..


Photo Courtesy 

மகாகவி

~என்.விநாயக முருகன்


ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

http://nvmonline.blogspot.in/2012/04/blog-post.html