ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்
அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்
தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்
பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்
'எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி
எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்
தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க...
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!
- ஆர்.எஸ்.பாலமுருகன்
3 comments:
Amazing !! Amzzing
Amazingly simple, but realistic scene! Well written. Congrats
வலிகள் மிகுந்த வரிகள்..... வாழ்த்துகள்.....
Post a Comment