Saturday, April 23, 2011

நினைவில் இருப்பது...




எத்தனை முழமென்று
நினைவில் இல்லை
பின்னிரவில் சாலையோரம் அன்று
பேரம் பேசிய மல்லிகைப் பூச்சரம்

பத்து ரூபாய் சொன்னாள்
வாங்கும் எண்ணமில்லை இருந்தும்
தூரத்துக் கூடைக்காரி
எட்டு ரூபாய் சொன்னதைச்
சொன்னேன்.

சட்டென
சரி எட்டு ரூபாய்க்கே வாங்கிக்கம்மா
என்றவளின் மறுப்பற்ற கீழ்ப்படிதல்
கடைசி நேர இயலாமையாலா
கடைசிப் பேருந்தைப் பிடிக்கும்
அவசரத்தாலா..

எந்தக் கடைசியாலோ
அந்தக் கடைசிக்குக்
கொண்டு நிறுத்திய பேரம்
உறுத்தியது

பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!

நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.

Monday, April 4, 2011

லட்சுமிக் குட்டி!



'ஏழும் மூணும் எத்தன?
இருபதுல
ஆறு போனா எத்தன?’
எனக்
கேள்விகளை
வீசிக்கொண்டு இருந்த
ஆசிரியரிடம்
கேட்பதற்கு
ஒரு கேள்வி இருந்தது
குழந்தையிடம்
'வண்ணத்துப்பூச்சிக்கு
கலர் அடிச்சது யாரு?’

- கண்மணிராசா

மரணத்தின் முன் ஏற்பாடுகள்



ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்

அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்

தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்

பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்

'எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி

எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்

தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க...
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!

- ஆர்.எஸ்.பாலமுருகன்

1x.com Link