
எத்தனை முழமென்று
நினைவில் இல்லை
பின்னிரவில் சாலையோரம் அன்று
பேரம் பேசிய மல்லிகைப் பூச்சரம்
பத்து ரூபாய் சொன்னாள்
வாங்கும் எண்ணமில்லை இருந்தும்
தூரத்துக் கூடைக்காரி
எட்டு ரூபாய் சொன்னதைச்
சொன்னேன்.
சட்டென
சரி எட்டு ரூபாய்க்கே வாங்கிக்கம்மா
என்றவளின் மறுப்பற்ற கீழ்ப்படிதல்
கடைசி நேர இயலாமையாலா
கடைசிப் பேருந்தைப் பிடிக்கும்
அவசரத்தாலா..
எந்தக் கடைசியாலோ
அந்தக் கடைசிக்குக்
கொண்டு நிறுத்திய பேரம்
உறுத்தியது
பதினைந்தைக் கொடுத்தேன்
சில்லறை தேடியவளின் கை பிடித்து
இருக்கட்டும் என்றதற்கு
அவள் நிமிர்ந்து பார்த்தபோது
எங்களிடையே பூத்தவை
எத்தனை மல்லிகைகள்...
நினைவில் இல்லை!
நன்றி : சிவஸ்ரீ கவிதைகள், ஆனந்த விகடன்.